இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சோதனை "முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது" -மத்திய அரசு


இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சோதனை முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது -மத்திய அரசு
x
தினத்தந்தி 6 July 2020 1:22 AM GMT (Updated: 6 July 2020 1:22 AM GMT)

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சோதனை முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது என மத்திய அரசு கூறி உள்ளது.

புதுடெல்லி:

தடுப்பூசிகள் மற்றும் பொதுவான மருந்துகளை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான இந்தியா இந்த பந்தயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல், இந்தியாவில் அதிவேகம் எடுத்துள்ளது. நேற்று தொடர்ந்து 3-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதித்துள்ளது. ஒரே நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 850 ஆகும். இதில் மராட்டியம், தமிழகம், டெல்லி, தெலுங்கானா, கர்நாடகம், அசாம், பீகார் ஆகிய 7 மாநிலங்கள் மட்டுமே 78 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

மராட்டியத்தில் ஒரே நாளில் 7,074 பேருக்கு தொற்று உறுதியானதின்மூலம் அங்கு மொத்தம் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நேற்று மொத்தம் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து 165 ஆக உள்ளது.

இதன்மூலம், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய தரவுகள் படி, கொரோனாவின் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ரஷியாவை இந்தியா முந்தி உள்ளது. ரஷியாவில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நேற்றிய நிலவரப்படி 6 லட்சத்து 80 ஆயிரத்து 283 ஆகும். இந்தியா தற்போது கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் ஜைகோவ்-டி  ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான மனித மருத்துவ பரிசோதனைகளுக்கான ஒப்புதல் வழங்கபட்டு உள்ளது.

இந்தியாவில் தயாராகும் முதல் தடுப்பு மருந்து இது. இதனால் இது மத்திய அரசு மேற்பார்வையில் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்புடன் தயாராகி வருகிறது. அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பின்னர் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று  கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசி தயாராகி விடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவிப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் நடைபெறும் முக்கியமான தேர்தல்களுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியல் செல்வாக்க்கை பெற தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. சோதனைகள் மூலம் மருந்துகளை விரைந்து கொண்டுவருவது கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

கொரோனா வைரஸ் தடுப்பூசியை வெளியிடுவதற்கான இலக்காக ஆகஸ்ட் 15 - சுதந்திர தினத்தை நிர்ணயிக்கும் ஐ.சி.எம்.ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) எழுதிய கடிதம் குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது.அதில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சோதனை முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது என கூறி உள்ளது.

Next Story