தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது - பினராயி விஜயன்


தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது -  பினராயி விஜயன்
x
தினத்தந்தி 7 July 2020 5:14 PM GMT (Updated: 7 July 2020 5:14 PM GMT)

தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது என்று பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.


திருவனந்தபுரம்,

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவு பொருட்கள் என்ற பெயரில் தங்கம் கடத்தப்படுகிறது என ரகசிய தகவல் கிடைத்தது.  தொடர்ந்து, திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த பார்சலை சோதனையிட்டதில், ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேசுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக, இவர் அமீரக நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.  அவர் தப்பியோடி விட்டார்.  அதிகாரிகள் அவரை தேடி வருகின்றனர்.

முதல் மந்திரி பினராயி விஜயனின் தலைமை செயலர் எம். சிவசங்கர்தான் கேரள தகவல் தொடர்பு துறைக்கும் செயலர். இதனால், அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது. தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள அரசுக்குத் தொடர்பில்லை. ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வாயிலாகவே தங்கம் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து விமான நிலையங்களும் மத்திய அரசின் கீழ் இயங்குகின்றன. மாநில அரசுகள் இதைப் பற்றி எதுவும் செய்ய முடியாது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.  தங்கக் கடத்தல் வழக்கில் கேள்விக்குரிய பெண்ணுக்கு சி.எம்.அலுவலகம் மற்றும் ஐ.டி துறையுடன் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story