மும்பை ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்து வழங்கும் ரோபோ


மும்பை ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்து வழங்கும் ரோபோ
x
தினத்தந்தி 9 July 2020 1:42 AM GMT (Updated: 9 July 2020 1:42 AM GMT)

மும்பை ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்து ரோபோ மூலம் வழங்கப்படுகிறது.

மும்பை, 

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அந்த நோய்தொற்றில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள முழு உடல் கவச உடைகளை அணிய வேண்டி உள்ளது. 

இதையும் தாண்டி அவர்களை கொரோனா தொற்று தாக்கி வருகிறது. மேலும் முழு உடல் கவச உடைகளை கழற்றாமல் பணிபுரியும் சூழல் உள்ளதால் அவர்கள் பல்வேறு சிரமங்களையும் சந்தித்து வருகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில் மும்பை ஒர்லியில் உள்ள பொடார் தனியார் ஆஸ்பத்திரியில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள வார்டில் ரோபோ டிராலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ரோபோ டிராலி கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வினியோகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. இதன் மூலம் கொரோனா நோயாளிகளிடம் இருந்து மருந்துகளை கொடுக்கும் நர்சுகள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் விலகியிருக்க முடியும். 

மேலும் அவர்களுக்கு வைரஸ் பரவும் ஆபத்தும் குறையும் என முதல்-மந்திரி அலுவலக டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரோபோ டிராலியின் வீடியோவும் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Next Story