சிங்கப்பூர் தேர்தல்: மக்கள் செயல் கட்சி வெற்றி, ஆட்சியை தக்க வைத்தது


சிங்கப்பூர் தேர்தல்: மக்கள் செயல் கட்சி வெற்றி, ஆட்சியை தக்க வைத்தது
x
தினத்தந்தி 11 July 2020 2:23 AM GMT (Updated: 11 July 2020 2:23 AM GMT)

சிங்கப்பூரில் ஆளும் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

சிங்கப்பூர்,

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான  மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே தேர்தலை அறிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்  பாராளுமன்ற தேர்தல் நேற்று (ஜூலை 10) நடைபெற்றது. முககவசம், கையுறைகள் அணிந்தபடி சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். வாக்களிக்க வழக்கமான நேரத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்பட்டு இருந்தது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குச் சாவடிகள் எண்ணிக்கையும்  அதிகரிக்கப்பட்டது.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.  இதில்,  ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தம் போட்டியிட்ட 93 இடங்களில் 90 சதவிகித இடங்களில் ஆளும் கட்சி வெற்றி பெற்றது. அதாவது, மொத்த வாக்குகளில் 61.26 சதவிகித வாக்குகளை ஆளும் கட்சி பெற்றது. அதேவேளையில், எதிர்க்கட்சியான 10 இடங்களை பெற்றது. சிங்கப்பூரில் கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சியின் ஆட்சியே தொடர்வது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லூங்,  நான் எதிர்பார்த்த அளவுக்கு வலுவான வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் மக்கள் அளித்துள்ள சிறந்த வெற்றி இது. 61 சதவித வாக்குகள் என்பது மிகவும் மதிப்புமிக்கது என்று நான் கருதுகிறேன்” என்றார்.  கடந்த 2015- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மக்கள் செயல் கட்சி,  69.9 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. 

Next Story