ராஜஸ்தான் துணை முதல் மந்திரி, பிரதேச காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்


ராஜஸ்தான் துணை முதல் மந்திரி, பிரதேச காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்
x
தினத்தந்தி 14 July 2020 8:57 AM GMT (Updated: 14 July 2020 9:17 AM GMT)

ராஜஸ்தான் துணை முதல் மந்திரி, பிரதேச காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட்டை காங்கிரஸ் கட்சி நீக்கியுள்ளது.

ஜெய்ப்பூர்

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்-மந்திரி அசோக் கெலாட், துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட காலமாக அதிகார மோதல் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது.

தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் நேற்று முன்தினம் சச்சின் பைலட் அறிவித்தார். மேலும் நேற்று நடைபெற இருந்த மாநில சட்டசபை காங்கிரஸ் 
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முதல்-மந்திரிக்கே ஆதரவாக இருப்பதாக கெலாட் தரப்பு தெரிவித்தது.

இந்த பரபரப்பான சூழலில் கட்சியின் சட்டசபைக்குழு கூட்டம் நேற்று முதல்-மந்திரி அசோக் கெலாட் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. எனினும் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்கள் என கருதப்படும் சில எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை.

சச்சின் பைலட் தனக்கு 30 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்க அவர்களது வீடியோவை வெளியிட்டு உள்ளார். சச்சின் பைலட்டின் முகாமில் சுமார் 15 எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும் வீடியோ வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நாங்கள் சச்சின் பைலட்டுக்கு 2-வது வாய்ப்பு கொடுக்கிறோம். இன்று நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இன்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒன்றிணைந்து, தலைமைக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். மக்கள் வாக்களித்துள்ள நிலையில், நாங்கள் எல்லோரும் மாநில வளர்ச்சிக்காக பாடுபட விரும்புகிறோம் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

ஆனால் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவது இல்லை என திட்டவட்டமாக பைலட் அறிவித்தார். எம்.எல்.ஏ.க்களின் இரண்டாவது கூட்டத்தை சச்சின் பைலட் தவிர்த்துவிட்டார்.

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் போர்மான்ட் ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த கூட்டத்தில் 102 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். 

இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட், அவருக்கு ஆதரவான இரண்டு மந்திரிகள் ஆகியோரை மந்திரி சபையில் இருந்து நீக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதேபோல் கட்சியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

இதனை தொடர்ந்து சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜிவாலா அறிவித்துள்ளார்.  இதேபோன்று, ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டு உள்ளார்.

விஸ்வேந்தர் சிங், ரமேஷ் மீனா ஆகிய 2 மந்திரிகளும் நீக்கப்பட்டு உள்ளனர்.  இந்நிலையில், முதல் மந்திரி அசோக் கெலாட், ஜெய்ப்பூரில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் கல்ராஜ் மிஷ்ராவை நேரில் சந்தித்து பேசி வருகிறார்.

Next Story