இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்துதான் 80% கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது - மத்திய சுகாதார அமைச்சகம்


இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்துதான் 80% கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது - மத்திய சுகாதார அமைச்சகம்
x
தினத்தந்தி 14 July 2020 12:48 PM GMT (Updated: 14 July 2020 12:48 PM GMT)

நாட்டில் கொரோனா பாதிப்புகளில் 50 %க்கும் மேல் மராட்டியம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில்தான் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,


 மத்திய சுகாதாரத்துறையின் சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களுக்குப்பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்துதான் 80% கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்புகளில் 50 %க்கும் மேல் மராட்டியம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில்தான் உள்ளது. எஞ்சிய 36 சதவிகிதம் 8 மாநிலங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 63 சதவிகிதமாக உள்ளது. நாட்டின் 20 மாநிலங்கள் தேசிய சராசரியை விட அதிக குணமடைந்தோர் விகிதத்தை கொண்டுள்ளது.அதிலும், குஜராத் (70%) ஒடிசா (67%) அசாம் (65%) தமிழ்நாடு (65%) உத்தரபிரதேசம் (64%) ஆகிய மாநிலங்கள் அதிக குணமடைந்தோர் விகித்தை கொண்டுள்ளது.   

மே 2 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை  கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது.  அதன்பிறகு, வைரசுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் விகிதம் 1.8 மடங்கு அதிகமாக உள்ளது.

சராசரியாக 10 லட்சம் பேரில் 140 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய பரிசோதனை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 22 மாநிலங்கள் சராசரியாக 10 லட்சம் பேரில் 140 அல்லது அதற்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறது.  எஞ்சிய மாநிலங்களும் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரை அடிப்படையில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Next Story