தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா அலுவலகத்தில் சுங்கத்துறை திடீர் சோதனை - 3 மணி நேரம் நடந்தது


தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா அலுவலகத்தில் சுங்கத்துறை திடீர் சோதனை - 3 மணி நேரம் நடந்தது
x
தினத்தந்தி 15 July 2020 10:30 PM GMT (Updated: 15 July 2020 9:00 PM GMT)

தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் பணிபுரிந்த அலுவலகத்தில் சுங்கத்துறையினர் 3 மணி நேரம் திடீர் சோதனை நடத்தினார்கள்.

திருவனந்தபுரம்,


திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானத்தில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தியது தெரிய வந்தது.

இதுதொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தூதரக முன்னாள் ஊழியர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினரான சந்தீப் நாயர் ஆகியோரை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு அமைப்பு) அதிகாரிகள் கைது செய்தனர். அதையடுத்து ஸ்வப்னா சுரேஷ் உள்பட 3 பேரும் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து கோர்ட்டு அனுமதியுடன் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை வருகிற 21-ந்தேதி வரை காவலில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் சிவசங்கரனிடம் சுங்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது.

மேலும் தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் கணவர் ஜெயசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் தங்கம் கடத்தல் தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து அடிக்கடி அவர் தங்கி சரித் மற்றும் சந்திப் நாயருடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. நட்சத்திர ஓட்டலில் அவருக்கு அறையை தலைமை செயலக ஊழியர் தான் முன்பதிவு செய்து கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில் ஸ்வப்னா சுரேஷ் ஏற்கனவே திருவனந்தபுரத்தில் பணியாற்றி வந்த தகவல் தொழில்நுட்ப அலுவலகத்துக்கு நேற்று காலை சுங்கத்துறையினர் சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை 3 மணி நேரம் நடந்தது.

அதே சமயம் திருவனந்தபுரத்தில் ஜெயசங்கருக்கு ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை சிவசங்கரன் முன்பதிவு செய்து கொடுத்திருப்பதும் தெரிய வந்தது. அந்த அடுக்கு மாடி குடியிருப்பிலும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.

Next Story