அசாமில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு; 48 லட்சம் பேர் பாதிப்பு


அசாமில் வெள்ளம்:  பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு; 48 லட்சம் பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 16 July 2020 9:20 AM GMT (Updated: 16 July 2020 9:20 AM GMT)

அசாமில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வடைந்துள்ளது.

கவுகாத்தி,

அசாமில் பருவமழை காலம் தொடங்கிய பின்னர் பெய்த தொடர் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  இதனால் அசாமில் 30 மாவட்டங்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளன.  வெள்ள நீரானது வீடுகள், கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.  மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு தஞ்சம் தேடி வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதுபற்றி அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், அசாமில் கடந்த மே 22ந்தேதி முதல் ஜூலை 15ந்தேதி வரை வெள்ள பாதிப்புக்கு 68 பேர் பலியாகி உள்ளனர். 4,766 கிராமங்களில் வசிக்கும் மக்கள் உள்பட 48 லட்சத்து 7 ஆயிரத்து 111 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக 487 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரத்து 567 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.  இதேபோன்று கால்நடைகளுக்கான தீவனங்களும் வழங்கப்பட்டு உள்ளன.  தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.

Next Story