ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தடை விதிக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தடை விதிக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 31 Aug 2020 11:57 PM GMT (Updated: 31 Aug 2020 11:57 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

புதுடெல்லி,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு நடந்ததை தொடர்ந்து, அந்த ஆலையை மூடுமாறு தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பித்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஆலையை மீண்டும் திறக்க இடைக்கால தடை விதித்தது. அத்துடன், இந்த வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என கூறிய சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரியும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று கடந்த 18-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் மாநில அரசு ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் நடைபெற்றது. விசாரணை தொடங்கியதும், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் (ஸ்டெர்லைட் ஆலை) தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் அனைவரும் இந்த மனு மீது 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த பதில் மனுக்கள் மீது எதிர்பதில் மனு தாக்கல் செய்ய ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு 4 வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. அந்த எதிர்பதில் மனுக்கள் மீது ஏதேனும் எதிர்வினைகள் தாக்கல் செய்ய வேண்டும் என்றால் தமிழக அரசு உள்ளிட்டோருக்கு 2 வாரங்களும் அவகாசம் அளிக்கப்பட்டது.

இவ்வாறு 10 வாரங்களுக்கு பிறகு வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுமாறு கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story