கொரோனாவுக்கு பலியாகும் டாக்டர்களை ராணுவ வீரர்களை போல கவுரவிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்


கொரோனாவுக்கு பலியாகும் டாக்டர்களை ராணுவ வீரர்களை போல கவுரவிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 Sep 2020 12:10 AM GMT (Updated: 1 Sep 2020 12:10 AM GMT)

கொரோனாவுக்கு பலியாகும் டாக்டர்களை, பாதுகாப்பு படையில் உயிர் தியாகம் செய்யும் வீரர்களை போல கவுரவிக்குமாறு பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

புதுடெல்லி,

வேகமாக பரவும் கொரோனாவுக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடும் போர் வீரர்களில் முக்கியமானவர்கள் டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் ஆவர். இந்த போராட்டத்தில் ஏராளமான டாக்டர்கள் தங்கள் இன்னுயிரை கொரோனாவிடம் இழந்து உள்ளனர்.

இந்த டாக்டர்களின் குடும்பத்தினருக்கு உதவுமாறு மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்து உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்டு உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர்கள் ஒரு சமூகமாக அதிக பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தை கொண்டுள்ளனர். நாடு முழுவதும் 2,006 டாக்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 307 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் 188 டாக்டர்கள் பொது மருத்துவர்கள் ஆகும்.

இந்த பயங்கரமான காலகட்டத்தில் டாக்டர் கள் தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால் சிறந்த பாரம்பரிய மருத்துவத்தின் மூலம் நாட்டுக்கு சேவை செய்வதை அவர்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர்.

எனவே கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழக்கும் டாக்டர்களை, பாதுகாப்பு படையில் உயிர் தியாகம் செய்யும் வீரர்களைப்போல கருதுங்கள். அதன்படி உயிரிழக்கும் டாக்டரின் வாழ்க்கைத்துணை அல்லது சார்ந்து வாழும் நபருக்கு அவரது தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்.

மேலும் அமைப்புகளின் போதாமை மற்றும் அலட்சியம் காரணமாக அரசுகள் வழங்கும் கருணைத்தொகை பயனாளரை சென்று சேர்வதில்லை. எனவே கொரோனாவுக்கு எதிரான போரில் மரணிக்கும் டாக்டர்களின் குடும்பத்துக்காக தேசிய ஒருங்கிணைந்த கருணைத்தொகை ஒன்றை அரசு உருவாக்க வேண்டும். இதுவே அவர்களது தியாகத்துக்கு தகுந்த நீதியாக இருக்கும்.

டாக்டர்களின் மரணத்தை உயர்ந்த தியாகமாக அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் என மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுஉள்ளது.

Next Story