இறுதி செமஸ்டர் தேர்வை 30-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் - பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தல்


இறுதி செமஸ்டர் தேர்வை 30-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் - பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 1 Sep 2020 7:08 PM GMT (Updated: 1 Sep 2020 7:08 PM GMT)

கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வை 30-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இறுதி செமஸ்டர் தேர்வையும் இப்போது இருக்கும் சூழ்நிலையில் நடத்தக்கூடாது என பல தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தேர்வை நடத்த அறிவுறுத்தியது.

அதன் அடிப்படையில் பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

2020-2021-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு மாணவர்கள் சேர்க்கை ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் (நேற்று முன்தினம்) முடிக்கப்பட்டு இருக்கவேண்டும். தற்காலிக சேர்க்கை, தகுதித்தேர்வு ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் வருகிற 30-ந்தேதி வரை மேற்கொள்ளலாம்.

தேவை ஏற்படும் பட்சத்தில் தற்காலிக சேர்க்கைக்கு மாணவர்கள் ஆர்வம் காட்டினால், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம், கல்வி நிறுவனத்தின் விதிமுறைகளின்படி தொடர்ந்து சேர்க்கை வழங்க பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். பல்கலைக்கழக மானியக்குழுவின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும். அதேபோல, கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story