திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா : மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோவில்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா : மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோவில்
x
தினத்தந்தி 18 Sep 2020 5:19 AM GMT (Updated: 18 Sep 2020 5:19 AM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் முழுவதும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி,

திருப்பதியில் ஏழுமலைகள் மீது கோவில் கொண்டுள்ள இறைவன் ஏழுமலையான், வெங்கடாஜலபதி, திருவேங்கடவன், மலையப்பசாமி எனப் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். திருமலை எப்போதும் பக்தர்கள் கூட்டத்தால் திருவிழாபோல் காட்சி அளிக்கும் என்றாலும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக இன்று தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் முழுவதும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாட வீதிகள் முழுவதும் வண்ண கோலங்கள் வரையப்பட்டு உள்ளது. 

வரும் 22ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையும், கிளியும், சென்னையில் இருந்து திருக்குடையும் சமர்ப்பிக்கப்பட உள்ளது. 23ஆம் தேதி ஆந்திர அரசு சார்பாக, அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். 

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் இருந்து பூக்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரம்மோற்சவ விழாவிற்காக திண்டுக்கல்லில் இருந்து பழனி புஷ்ப கைங்கர்ய சபை சார்பில், ஒவ்வொரு நாளும் ஒரு டன் பூக்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதன்படி, இன்று பிரம்மோற்சவத்தின் முதல் நாளை முன்னிட்டு, ஒரு டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story