இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 1 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர் புதிய பாதிப்பும் 76 ஆயிரத்துக்கு கீழே சென்றது


இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 1 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர் புதிய பாதிப்பும் 76 ஆயிரத்துக்கு கீழே சென்றது
x
தினத்தந்தி 22 Sep 2020 11:15 PM GMT (Updated: 22 Sep 2020 10:19 PM GMT)

இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். அதேநேரம் புதிய பாதிப்பும் 76 ஆயிரத்துக்கு கீழே சரிந்துள்ளது.

புதுடெல்லி,

உலக மக்களினங்களையும், அரசுகளையும் தொடர்ந்து பதற்றத்துடனேயே வைத்திருக்கும் கொரோனா, இன்னும் தனது ஆதிக்கத்தை நிறுத்தவில்லை. தினந்தோறும் புதிய நோயாளிகள், கொத்துக்கொத்தான மரணங்கள் என உயிர்ப்புடனேயே இருப்பதுடன், மருத்துவ துறையையும் விழிப்புடனேயே வைத்திருக்கிறது.

பிற நாடுகளைப்போல இந்தியாவும் கொரோனாவின் கொடூரத்தை தினமும் சந்தித்து வருகிறது. இங்கும் ஆயிரக்கணக்கான புதிய நோயாளிகள், ஏராளமான மரணங்கள் என கொரோனாவின் கோரத்தாண்டவம் தொடரத்தான் செய்கிறது. எனவே கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

அப்படி அரசுகளின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு கைமேல் பலன் கிடைத்து வருகிறது. நாடு முழுவதும் தினமும் தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கையே இதற்கு சாட்சியாக அமைகிறது. இதில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து மீண்டவர் எண்ணிக்கையில் புதிய உச்சம் ஏற்பட்டு உள்ளது.

அந்தவகையில் நாடு முழுவதும் ஒரே நாளில் 1 லட்சத்து ஆயிரத்து 468 பேர் தொற்றை வென்று உள்ளனர். இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக இவ்வளவு அதிகமானோர் மீண்டிருப்பது அரசுகளையும், மருத்துவத்துறையையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 45 லட்சத்தை (44,97,867) நெருங்கி விட்டது. இது மொத்த பாதிப்பில் 80.86 சதவீதம் ஆகும். கடந்த 4 நாட்களாக தினமும் அதிகப்படியான குணமடைவோரை நாடு பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இதைப்போல நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 10 லட்சத்துக்கு கீழே சரிந்துள்ளது. அந்தவகையில் 9 லட்சத்து 75 ஆயிரத்து 861 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர். இது 17.54 சதவீதமாகும்.

இந்தியாவில் இதுவரை குணமடைந்தவர்களில் 79 சதவீதம் பேர் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா, டெல்லி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதைப்போல புதிதாக குணமடைந்தவர்களில் 31.5 சதவீதத்தினர் மராட்டியர்கள் ஆவர்.

நாடு முழுவதும் சுமார் 45 லட்சம் பேர் குணமடைந்திருப்பதன் மூலம், உலக அளவில் அதிக குணமடைந்தவர்களை கொண்டிருக்கும் நாடாக இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. ‘பரிசோதனை, கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல்’ என்ற அரசின் கொள்கையே இந்த சாதனையை படைக்க உதவியதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இதற்கிடையே இந்தியாவின் தினசரி தொற்று எண்ணிக்கையும் பல நாட்களுக்குப்பின் 75 ஆயிரத்து 809 ஆக குறைந்து உள்ளது. இதற்கு முன் கடந்த 8-ந்தேதி கடைசியாக 76 ஆயிரத்துக்கு கீழே தொற்று எண்ணிக்கை குறைந்து இருந்தது. புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களையும் சேர்த்து இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்து 62 ஆயிரத்து 663 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் 1,053 புதிய மரணங்கள் ஒரே நாளில் ஏற்பட்டு உள்ளன. இதனால் இதுவரை கொரோனா ஏற்படுத்திய மரணங்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 935 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் நாட்டின் பலி விகிதம் தொடர்ந்து 1.60 சதவீதமாகவே இருக்கிறது.

புதிதாக நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 344 பேரும், கர்நாடகாவில் 122 பேரும், உத்தபிரதேசத்தில் 88 பேரும், மேற்கு வங்காளத்தில் 76 பேரும், தமிழகத்தில் 60 பேரும், ஆந்திராவில் 51 பேரும், பஞ்சாபில் 47 பேரும், மத்திய பிரதேசத்தில் 37 பேரும் டெல்லியில் 32 பேரும் இறந்துள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கையிலும் மராட்டியமே முதலிடத்தில் உள்ளது. அங்கு 33 ஆயிரத்து 15 பேர் இதுவரை கொரோனாவுக்கு இன்னுயிரை ஈந்துள்ளனர். அடுத்ததாக தமிழகம் 8,947, கர்நாடகா 8,145, ஆந்திரா 5,410, உத்தரபிரதேசம் 5,135, டெல்லி 5,014, மேற்கு வங்காளம் 4,421, குஜராத் 3,336, பஞ்சாப் 2,860, மத்திய பிரதேசம் 2,007 ஆகிய மாநிலங்கள் உள்ளன.

நாட்டில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 9 லட்சத்து 33 ஆயிரத்து 185 ஆகும். இதனால் மொத்த எண்ணிக்கை 6 கோடியே 53 லட்சத்து 25 ஆயிரத்து 779 என்ற வகையில் உள்ளது.

Next Story