வங்கி மாதத் தவணை விவகாரத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை-சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்


வங்கி மாதத் தவணை விவகாரத்தில் ரூ.2 கோடி  வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை-சுப்ரீம் கோர்ட்டில்  மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
x
தினத்தந்தி 3 Oct 2020 6:40 AM GMT (Updated: 3 Oct 2020 6:40 AM GMT)

வங்கி மாதத் தவணை விவகாரத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர்க் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இருப்பினும், கடனுக்கான வட்டியைச் சேர்த்து வசூலிக்கும்போது செலுத்த வேண்டிய தவணைக் காலம் அதிகரிப்பதோடு கடன், வட்டி, வட்டிக்கு வட்டி சுமை அதிகரிக்கும். இதைப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டினர். சலுகை என்றால் குறைந்தபட்சம் இந்தக் காலகட்டத்துக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்,  ஆகஸ்ட் 31-ம் தேதிவரை வாராக் கடனாக அறிவிக்கப்படாத வங்கிக் கணக்குகள் அனைத்தையும், மறு உத்தரவு வரும் வரை வாராக் கடனாக அறிவிக்கக் கூடாது என உத்தரவிட்டது. 

இந்த நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு,  வங்கி மாதத் தவணை விவகாரத்தில் ரூ.2 கோடி  வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை என தெரிவித்துள்ளது. 


Next Story