பூமிக்கு மிக அருகில் இன்று வருகிறது, செவ்வாய் கிரகம்


பூமிக்கு மிக அருகில் இன்று வருகிறது, செவ்வாய் கிரகம்
x
தினத்தந்தி 5 Oct 2020 9:12 PM GMT (Updated: 5 Oct 2020 9:12 PM GMT)

செவ்வாய் கிரகம் இன்று பூமிக்கு அருகில் வருகிறது.

புதுடெல்லி,

செவ்வாய் கிரகம், சூரியனை சுற்றி வரும் தனது பயணத்தின்போது, அதன் வட்டப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை இன்று அடைகிறது.

அதாவது, பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40 கோடியே 13 லட்சம் கி.மீ. ஆகும். இதில், இன்று பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும்போது, இரண்டுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. ஆக இருக்கும்.

இந்திய நேரப்படி, இன்று இரவு 7.47 மணிக்கு இந்த அரிய வானியல் நிகழ்வு ஏற்படுகிறது. அதன்பிறகு, இன்னும் 13 ஆண்டுகள் கழித்துத்தான் இந்த நிகழ்வு உருவாகும்.

இதுகுறித்து இந்திய கோள்கள் சமூகத்தின் இயக்குனர் ஸ்ரீரகுநந்தன் குமார் கூறியதாவது:-

வருகிற 14-ந்தேதி பிற்பகல் 2.56 மணிக்கு செவ்வாய் கிரகமும், சூரியனும் ஒன்றுக்கொன்று எதிர்எதிரே காணப்படும். நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது, செவ்வாயும், சூரியனும் ஒரே நேர்கோட்டில் தெரியும்.

எந்த கிரகமும் சூரியனுக்கு நேர் எதிரில் வரும்போது, பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடைவது இயல்புதான். அந்த வகையில், நாம் தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது, செவ்வாய் கிரகம் பெரிதாகவும், பிரகாசமாகவும், நெருக்கமாகவும் தெரியும்.

இந்த ஆண்டு இறுதிவரை வானில் செவ்வாய் கிரகத்தை காணலாம். மிக பிரகாசமாக பார்க்க வேண்டுமானால், இம்மாத இறுதிவரை காணலாம். ஏனென்றால், நாட்கள் ஆக ஆக தூரம் அதிகரிப்பதால், பிரகாசமும், அளவும் குறையும்.

பொதுமக்கள் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு வெறும் கண்ணால் செவ்வாய் கிரகத்தை பார்க்கலாம். சூரியன் மேற்கில் மறைந்தவுடன் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைக்கு இடையே அரை மணி நேரம் பார்க்கலாம். பல வாரங்களுக்கு இப்படி பார்க்கலாம்.

நள்ளிரவு நேரமாக இருந்தால், நமது தலைக்கு மேலே காணலாம். காலை நேரத்தில், மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்க்கும்போது, ஆரஞ்சு நிறத்தில் பிரகாசமாக தெரியும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story