ராம்விலாஸ் பஸ்வான் மறைவு: ஜனாதிபதி - பிரதமர் மோடி இரங்கல்


ராம்விலாஸ் பஸ்வான் மறைவு: ஜனாதிபதி - பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 8 Oct 2020 5:24 PM GMT (Updated: 8 Oct 2020 5:24 PM GMT)

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது  வினியோகத்துறை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெர்று வந்தார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானதாக அவரது மகன் சிராக் பாஸ்வான் டுவிட்டரில் தகவல் தெரிவித்து உள்ளார்.

அவரது டுவிட்டர் பக்கத்தில் ''அப்பா நீங்கள் தற்போது இந்த உலகத்தில் இல்லை. எப்போது எல்லாம் எனக்கு தேவையோ அப்போது எல்லாம் நீங்கள் என்னுடன் இருந்து இருக்கிறீர்கள். உங்களை மிஸ் செய்கிறேன்.'' என்று பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சோசலிச தலைவர் ஜெய்பிரகாஷ் நாராயண் மீது கொண்ட ஈர்ப்பால் இளம் வயதிலேயே நெருக்கடியை நிலையை எதிர்த்து போராடியவர் ராம் விலாஸ் பாஸ்வான் என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

எனது சோகத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ராம் விலாஸ் பாஸ்வானின் மரணம் எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. எனது நண்பரை இழந்துள்ளேன்.

மதிப்புக்குரிய சக தோழரை இழந்து விட்டேன். ஒவ்வொரு ஏழையின் வாழ்விலும் ஒளிவிளக்கு ஏற்ற வேண்டும் என பணியாற்றியவர் ராம் விலாஸ் பாஸ்வான்.' எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story