காக்கிநாடா அருகே ஆழ்ந்த காற்றழுத்தம் கரையை கடந்தது: ஆந்திராவில் 24 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது


காக்கிநாடா அருகே ஆழ்ந்த காற்றழுத்தம் கரையை கடந்தது: ஆந்திராவில் 24 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது
x
தினத்தந்தி 13 Oct 2020 9:01 PM GMT (Updated: 13 Oct 2020 9:01 PM GMT)

காக்கிநாடா அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இதனால் ஆந்திராவில் 24 செ.மீ. அளவுக்கு மழை கொட்டித்தீர்த்தது. கப்பல், படகுகள் கரைக்கு அடித்துச்செல்லப்பட்டன.

காக்கிநாடா, 

மேற்கு மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தீவிரமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. ஆந்திரா நோக்கி நகர்ந்தது.

கடைசி 6 மணி நேரத்தில், மணிக்கு 24 கி.மீ. வேகத்தில் மேற்கு வடமேற்காக நகர்ந்து ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவை நெருங்கியது.

நேற்று காலை 6½ மணிக்கும், 7½ மணிக்கும் இடையே காக்கிநாடா அருகே ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

இதனால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் 11.5 செ.மீ. முதல் 24 செ.மீ. வரை கனமழை பெய்தது. அதிக அளவாக, கிழக்கு கோதாவரி மாவட்டம் தல்லரேவு என்ற இடத்தில் 24.3 செ.மீ. மழை பெய்தது.

இந்த மழையால், பலத்த சேதம் ஏற்பட்டது. கிழக்கு கோதாவரி மாவட்டம் பொம்முரு கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பலியானார். கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ஸ்ரீகாகுளம், விழியாநகரம், விசாகப்பட்டினம், கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்தது.

கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த வங்காளதேச சரக்கு கப்பல், காற்றில் அடித்துச் செல்லப்பட்டது. விசாகப்பட்டினம் தென்னட்டி பார்க் கடற்கரையில் கரை ஒதுங்கியது. அதில் இருந்த 15 சிப்பந்திகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீனவர்களின் படகுகளும் கரைக்கு அடித்துச்செல்லப்பட்டன. நல்லவேளையாக உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.

காக்கிநாடா துறைமுகத்தில் 13 சர்வதேச கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சரக்கு ஏற்றும் பணியும், இறக் கும் பணியும் தடைபட்டது.

விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களில் சாலைகள் உருக்குலைந்தன. மின் வினியோக கட்டமைப்பு முற்றிலும் சேதமடைந்தது.

33 கிலோ வோல்ட், 11 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின்நிலையங்கள் பழுதடைந்தன. இருப்பினும், துரிதமாக பழுதை நீக்கி, மின் வினியோகத்தை சீரமைத்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமடைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள், வெள்ளத்தில் மூழ்கின.

தண்டவா, சாரதா, கோஸ்தானி போன்ற சிறு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. முக்கிய அணைகளில் தண்ணீர் வழிந்தோடியது. தெற்கு ஒடிசா, தெலுங்கானா ஆகியவற்றில் மிதமான மழை பெய்தது.


Next Story