கேரள தங்க கடத்தல் வழக்கு; முதல் மந்திரியின் முன்னாள் முதன்மை செயலரை கைது செய்ய தடை


கேரள தங்க கடத்தல் வழக்கு; முதல் மந்திரியின் முன்னாள் முதன்மை செயலரை கைது செய்ய தடை
x
தினத்தந்தி 15 Oct 2020 10:19 AM GMT (Updated: 15 Oct 2020 10:19 AM GMT)

கேரள தங்க கடத்தல் வழக்கில் முதல் மந்திரியின் முன்னாள் முதன்மை செயலரை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

கேரளா,

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் கடந்த ஜூலை மாதம் 5ந்தேதி தூதரகத்திற்கு வந்த பார்சலை சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் அன்றைய மதிப்பில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், வழக்குடன் தொடர்புடைய தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.  இதுவரை 20 பேர் வரை கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கை அமலாக்க துறை மற்றும் சுங்க துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.  ஸ்வப்னாவுடன் கூட்டாளியாக செயல்பட்ட கும்பல், திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் முதல் நடப்பு 2020ம் ஆண்டு ஜூன் வரை சுமார் 19 முறை தங்கத்தை கடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நவம்பர் மாதத்தில் நான்கு முறை, டிசம்பரில் 12 முறை, ஜனவரி, மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் தலா ஒரு முறை சட்டவிரோதமாக தங்கம் கடத்தி உள்ளனர்.  ஸ்வப்னாவும், அவரது கும்பலும் டிசம்பரில் மட்டும் 36 கிலோ தங்கத்தை கடத்தி உள்ளனர்.

இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் என்பவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

அவர் இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமீன் கோரியிருந்துள்ளார்.  அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வழக்கு விசாரணையில் ஆஜராகவும், ஒத்துழைப்பு வழங்கவும் சிவசங்கர் தயாராகவே இருக்கிறார்.

என்.ஐ.ஏ. மற்றும் சுங்க இலாகா ஆகியவை மொத்தம் 90 மணிநேரம் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளன.  100 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடந்த நிலையில், அவர் வழக்கில் இடையூறு ஏற்படுத்துகிறார் என்ற வகையிலான எந்தவித குற்றச்சாட்டுகளும், அவருக்கு எதிராக விசாரணை முகமைகளால் முன்வைக்கப்படவில்லை.

அவர் ஒரு பொறுப்புள்ள அதிகாரி மற்றும் ஊடகங்களின் நெருக்கடியால் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.  அவர் தப்பியோட போவதில்லை என தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரத்தில் பதில் மனு அளிக்க கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் காலஅவகாசம் கோரியதனை தொடர்ந்து, விசாரணையை வருகிற 23ந்தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது.  அதுவரை சிவசங்கர் கைது செய்யப்பட கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Next Story