தெலுங்கானா வெள்ள மீட்பு பணியில் உதவ ராணுவத்துக்கு அழைப்பு


தெலுங்கானா வெள்ள மீட்பு பணியில் உதவ ராணுவத்துக்கு அழைப்பு
x
தினத்தந்தி 20 Oct 2020 5:19 PM GMT (Updated: 20 Oct 2020 5:19 PM GMT)

தெலுங்கானா வெள்ள மீட்பு பணியில் உதவ ராணுவத்துக்கு தெலுங்கானா மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஐதராபாத், 

வடகிழக்கு பருவமழையையொட்டி தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  எனினும், தெலுங்கானாவில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட 24 மணிநேரத்தில் பெய்த கனமழையானது (72.5 மி.மீ.), கடந்த 10 ஆண்டுகளில் அக்டோபரில் பெய்த 3வது அதிக மழை பொழிவாகும்.

தெலுங்கானாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது.  தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி கடந்த ஒரு வாரத்தில் 70 பேர் பலியாகி உள்ளனர்.

கனமழை மற்றும் வெள்ளம் சூழ்ந்த நிலையில் பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.  பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளப் மீட்பு பணிகளை துரிதமாக செயல்படுத்த ராணுவ குழுவினருக்கு தெலுங்கானா மாநில அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதனால் விரைவில் ராணுவமும் வெள்ள மீட்பு பணியில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  வெள்ள மீட்பு பணிகளுக்காக 9 குழுக்கள் அமைக்கப்பட்டு வேகமாக மீட்பு பணிகள் நடக்கிறது. கடந்த 17 முதல் 20-ந் தேதி வரை 427 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

Next Story