தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்


தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்
x
தினத்தந்தி 21 Oct 2020 12:03 PM GMT (Updated: 21 Oct 2020 12:03 PM GMT)

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவதில் ஒத்துழைப்பு வழங்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆனையம் கடிதம் எழுதியுள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன.

இந்நிலையில் தற்போது தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வரக்கூடிய மாநிலங்களில் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடிய காட்சிகள் செய்திகளில் வெளியாகின. இதனால் கொரோனா பரவல் ஏற்படும் அபாயம் இருப்பதால், இந்த விவகாரம் தொடர்பாக தற்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அதில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் குறித்து மிகவும் ஆழ்ந்த முறையில் தேர்தல் ஆணையம் கவனித்து வருவதாகவும், தேர்தல் ஆணையத்தின் விதிகளை வேட்பாளர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளை மீறக்கூடிய வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டங்களின் ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கும், மாவட்ட நிர்வாகத்தினருக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அரசியல் கட்சியினர் பின்பற்றி இந்த விவகாரத்தில் தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story