19 நாட்களிலேயே முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்ட யு.பி.எஸ்.சி.


19 நாட்களிலேயே முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்ட யு.பி.எஸ்.சி.
x
தினத்தந்தி 23 Oct 2020 3:57 PM GMT (Updated: 23 Oct 2020 3:57 PM GMT)

அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் 19 நாட்களிலேயே யு.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து, அதற்கான தேர்வை நடத்தி வருகிறது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும்.

அந்த வகையில் 2020-ம் ஆண்டுக்கான அறிவிப்பு ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 796 காலிப்பணியிடங்களுக்கான இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

அதன்படி, கடந்த மே 31-ந்தேதி முதல் நிலைத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட சிவில் சர்வீசஸ் முதல்நிலைத்தேர்வு பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே அக்டோபர் 4-ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 72 நகரங்களில் 2 ஆயிரத்து 569 மையங்களில் சுமார் 6½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினார்கள்.

இந்நிலையில்,  அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகளை யு.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு ஜனவரி 8-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதன்முறையாக தேர்வு நடைபெற்று 19 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story