இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 90.62 சதவீதமாக உயர்வு


இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 90.62 சதவீதமாக உயர்வு
x
தினத்தந்தி 27 Oct 2020 6:40 AM GMT (Updated: 27 Oct 2020 6:40 AM GMT)

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 90.62 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

உலகில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து நிலையில், நாடு முழுவதும் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை கணிசாக உயர்ந்து வருவதுடன், உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 86.17 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 ஆயிரத்து 470 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 79 லட்சத்து 46 ஆயிரத்து 429 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 63,842 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 72,01,070 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணமடைந்தோர் விகிதம் 90.62 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்து 857 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7.88 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா வைரஸால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 488 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் உயிரிழப்பு 1.50 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 84 பேரும், கர்நாடகாவில் 42 பேரும், மேற்கு வங்கத்தில் 59 பேரும், தமிழகத்தில் 32 பேரும், டெல்லியில் 54 பேரும், சத்தீஸ்கரில் 43 பேரும் உயிரிழந்தனர்.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story