இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்கும் மலபார் கூட்டுப்பயிற்சி தொடங்கியது


இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்கும் மலபார் கூட்டுப்பயிற்சி தொடங்கியது
x
தினத்தந்தி 3 Nov 2020 3:05 PM GMT (Updated: 3 Nov 2020 3:05 PM GMT)

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய ராணுவ பலம் வாய்ந்த நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் இந்த கூட்டுப்பயிற்சி சீனாவுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

இந்திய, அமெரிக்க கடற்படைகள் இணைந்து 1992-ம் ஆண்டு முதல்  மலபார் அருகே கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த  கூட்டுப்பயிற்சியில் 2007-ஆம் ஆண்டு முதன்முறையாக பங்கேற்ற ஜப்பான்  2016 -ஆம் ஆண்டு முதல் இந்த பயிற்சியில் நிரந்தரமாக இணைந்து  கொண்டது. இதனிடையே தென் சீனக்கடலில் சீனாவின் ஆதிக்கம்  அதிகரித்து வரும் நிலையில் இந்த கடற்படை கூட்டுப்பயிற்சியில்  இணைந்துகொள்ள ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து லடாக் மற்றும் தென் சீனக் கடல் பகுதியில் அத்துமீறி  செயல்படும் சீனாவுக்கு பதிலடி தரும் வகையில் இந்த ஆண்டு  தொடங்கியுள்ள மலபார் கடற்படை கூட்டுப்பயிற்சியில்  ஆஸ்திரேலியாவையும் இந்தியா இணைத்துள்ளது.  வங்காள விரிகுடா கடலில், விசாகப்பட்டினம் கடலோரத்தில்  இன்று தொடங்கியுள்ள முதற்கட்ட மலபார் பயிற்சி வரும் 6 ஆம் தேதி  வரை நடைபெறுகிறது.

அமெரிக்கா, இந்தியா,  ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய ராணுவ பலம் வாய்ந்த நாடுகள்  இணைந்து மேற்கொள்ளும் இந்த கூட்டுப்பயிற்சி சீனாவுக்கு கிலியை  ஏற்படுத்தியுள்ளது. 

Next Story