செயற்கைக்கோளை பூமியில் இருந்து கட்டுப்படுத்தும் பொழுது இ.வி.எம். இயந்திரங்களை ஏன் ஹேக் செய்ய முடியாது? காங்கிரஸ் கேள்வி


செயற்கைக்கோளை பூமியில் இருந்து கட்டுப்படுத்தும் பொழுது இ.வி.எம். இயந்திரங்களை ஏன் ஹேக் செய்ய முடியாது? காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 10 Nov 2020 12:21 PM GMT (Updated: 10 Nov 2020 12:21 PM GMT)

செவ்வாய் கோளுக்கு செல்லும் விண்கல திசையை பூமியில் இருந்து கட்டுப்படுத்த முடியும்பொழுது மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை ஏன் ஹேக் செய்ய முடியாது? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுடெல்லி,

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் மற்றும் 11 மாநில சட்டசபைக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

வாக்கு எண்ணிக்கை முறையாக நடந்து வருகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உதித் ராஜ் இன்று கூறும்பொழுது, செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகியவற்றுக்கு செல்லும் விண்கலம் உள்ளிட்டவற்றின் திசையை பூமியில் இருந்து கட்டுப்படுத்த முடியும் எனும்பொழுது, மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை ஏன் ஹேக் செய்ய முடியாது?

அமெரிக்காவில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை கொண்டு தேர்தல் நடந்திருக்கும் என்றால் டிரம்ப் தோல்வி அடைந்திருக்கும் சாத்தியம் உண்டா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

இதன்பின்னர் அவர் பேசும்பொழுது, காங்கிரஸ் வெற்றி பெற்றால் கூட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.  நிலவிலோ அல்லது செவ்வாயிலோ உள்ள செயற்கைக்கோள்களை இங்கிருந்து ஒருவரால் கட்டுப்படுத்த முடியும்பொழுது, அவர்கள் முன்னால் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் எல்லாம் என்ன செய்ய முடியும்?

சமீபத்திய அரியானா தேர்தலில், சில சிறுவர்கள் புளூடூத் வழியே மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை ஹேக் செய்தனர் என்பதற்காக பிடிபட்டனர்.  அதனால் பீகார் தேர்தல் மட்டுமில்லாமல் அனைத்து தேர்தல்களுக்காகவும் நான் இதனை கூறுகிறேன் என்று முடித்து கொண்டார்.

Next Story