உள்ளூர் பொருட்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் - பொதுமக்களுக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் வேண்டுகோள்


உள்ளூர் பொருட்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் - பொதுமக்களுக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 11 Nov 2020 1:19 PM GMT (Updated: 11 Nov 2020 1:19 PM GMT)

உள்ளூர் பொருட்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் என பொதுமக்களுக்கு மத்திய ஜவுளி அமைச்சகம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

புதுடெல்லி,

கைவினைப் பொருட்கள், இந்தியாவின் தொன்மையான கலாச்சார பாரம்பரியத்தின் சின்னமாகவும், வாழ்வாதாரத்திற்கு முக்கிய அம்சமாகவும் விளங்குகின்றன.

இந்நிலையில், உள்ளூர் பொருட்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் என பொதுமக்களை மத்திய ஜவுளி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி, வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 9-ம் தேதி பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை அடுத்து, உள்நாட்டுத் துணிகள், கைவினைப் பொருள்களின் வர்த்தகத்தை ஊக்குவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம். சிறு அகல் விளக்காக இருக்கட்டும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் துணி வகைகள், படுக்கை விரிப்புகள், திரைச்சீலைகளாக இருக்கட்டும், நமது அன்பிற்குரியவர்களுக்கான அன்பளிப்பாக இருக்கட்டும்.

இந்த தீபாவளியை முன்னிட்டு நாம் வாங்கும் அனைத்துப் பொருட்களும் நம்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களாக அமையட்டும். இந்திய நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள், உள்நாட்டு மற்றும் சிறிய வணிகர்களிடமிருந்து நீங்கள் வாங்கும் பொருட்கள் குறித்து ட்விட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்வதுடன், #Local4Diwali என்ற ஹேஷ்டேகையும் பயன்படுத்தி தீபாவளி விற்பனையை ஊக்குவிக்கலாம்.

துணி வகைகள், கைவினைப் பொருட்கள், அல்லது தீபாவளிக்கு வாங்கும் பரிசுப்பொருட்களை புகைப்படம் எடுத்து அதை விற்பனை செய்பவரையும் குறிப்பிட்டு #Local4Diwali என்ற ஹேஷ்டேகை பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதன் மூலம், உள்ளுர் வியாபாரிகள் பயன்பெறுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story