முதல்-மந்திரி யார் என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு எடுக்கும் - நிதிஷ் குமார் பேட்டி


முதல்-மந்திரி யார் என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு எடுக்கும் -  நிதிஷ் குமார் பேட்டி
x
தினத்தந்தி 12 Nov 2020 3:10 PM GMT (Updated: 12 Nov 2020 3:10 PM GMT)

முதல்-மந்திரி பதவிக்கு நான் உரிமை கோரவில்லை, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பாட்னா,

பீகாரில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் 3 கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.

ஆரம்பத்தில் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணி முன்னிலை பெற்றது. பின்னர் நிலைமை மாறியது. பா.ஜ.க. கூட்டணியும், மெகா கூட்டணியும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தன. ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதில் நீண்ட இழுபறி நிலவியது.

முடிவில் 243 இடங்களை கொண்ட சட்டசபையில், பா.ஜ.க. கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. எதிர் அணியான மெகா கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்றது.

அதே நேரத்தில் 75 இடங்களில் வெற்றி பெற்று, மெகா கூட்டணியின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. 74 இடங்களுடன் பா.ஜ.க. இரண்டாவது இடத்தை பிடித்தது. அதன் கூட்டணி கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களுடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த எச்.ஏ.எம்.எஸ். கட்சியும், வி.ஐ.பி. கட்சியும் தலா 4 இடங்களில் வெற்றி பெற்றன. இதனால் கூட்டணியின் பலம், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான 122 இடங்களை கடந்து 125 இடங்கள் என்ற நிலைக்கு வந்தது.

இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணி கடுமையான போட்டியை ஏற்படுத்தி சவாலாக அமைந்தது. பா.ஜ.க. கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளத்துக்கு எதிராக சிராக் பஸ்வான் தனது லோக்ஜனசக்தி கட்சி சார்பில் வேட்பாளர்களை களமிறக்கியது, மேலும் சவாலாக அமைந்தது.

மற்றொரு பக்கம் முஸ்லிம் ஓட்டுகளை குறிவைத்து ஒவைசி தனது ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியை களம் இறக்கியது இன்னுமொரு சவால்தான். அந்த கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்று அரசியல் அரங்கை அதிர வைத்து இருப்பது கவனிக்கத்தக்கது.

நிதிஷ் குமாரின் 15 ஆண்டு கால ஆட்சிக்கு எதிரான அலை இன்னொரு பக்கம் வீசியது. இப்படி கடும் சவால்களையெல்லாம் முறியடித்துதான், பா.ஜ.க. கூட்டணி வென்று, ஆட்சியை தக்க வைத்துள்ளது.

இதனிடையே பீகாரில் சவால்களை முறியடித்து பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. தீபாவளிக்கு பின்னர் நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி தெரிவித்தார்.

இந்நிலையில், நிதிஷ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி9யதாவது:-

பீகார் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். இந்த கூட்டணியே ஆட்சியமைக்கும். பதவியேற்பு விழா தீபாவளிக்கு பிறகு நடைபெறலாம். எனினும் இப்போது ஏதும் கூற முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகே இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். முதல்-மந்திரி பதவிக்கு நான் உரிமை கோரவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் தான் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story