மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு


மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2020 2:17 PM GMT (Updated: 1 Dec 2020 2:17 PM GMT)

35 விவசாய அமைப்புகளுடனான மத்திய அரசின் பேச்சு வார்த்தை தோல்வி, போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்து உள்ளனர்

புதுடெல்லி:
 
மத்திய அரசு கொண்டு வந்த  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 6-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முயன்றனர்.  நிலமை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 6-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையில், டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அழைப்பை விவசாயிகள் ஏற்க மறுத்தையடுத்து இன்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க முதலில் மறுத்த விவசாய குழு தலைவர்கள் பின்னர் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக அறிவித்தனர்.  

இந்நிலையில், 35 விவசாய குழுக்கள்  மற்றும் மத்திய அரசு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது

பேச்சு வார்த்தையில் மத்திய அரசு சார்பில் , வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மற்றும்  வர்த்தக கைத்தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

புதிய  வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எழுப்பியுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய ஒரு குழுவை அமைக்க மத்திய அரசு   முன்வந்தது, ஆனால் 35 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளால் அது நிராகரிக்கப்பட்டது . இதனால் எந்தவொரு தீர்மானமும் இல்லாமல்  பேச்சுவார்த்தை முடிவடைந்தது.

டிசம்பர் 3 வியாழக்கிழமை அரசு மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைக்கு  அழைப்பு விடுத்துள்ளது என்று தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை  தொடரும் என்றும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

விவசாய சமூகத்தின் நலனுக்கு எதிரானது என்று  மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய விவசாய பிரதிநிதிகள் ஒருமனதாக இருந்ததாகவும், மேலும் போராட்டத்தை தொடரப்போவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. 

கூட்டத்திற்குப் பிறகு, பாரத் கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்) தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரகான் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. டிசம்பர் 3 ம் தேதி மற்றொரு கூட்டத்திற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என்றும் கூறினார்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறும் போது  விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.பார்ப்போம் என்று  கூறினார்.

Next Story