விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பு மருந்து போடும் பணி விரைவில் தொடங்கும் - பிரதமர் மோடி


விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பு மருந்து போடும் பணி விரைவில் தொடங்கும் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 4 Dec 2020 8:35 AM GMT (Updated: 4 Dec 2020 8:35 AM GMT)

முன்கள பணியாளர்கள், முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை, மாநிலங்களவை இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காணொலி மூலமாக பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

தடுப்பூசியின் விலை குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாதுகாப்பான மற்றும் விலை குறைவான தடுப்பூசி இந்தியாவில் நிச்சயம் கிடைக்கும். இந்தியாவில் மொத்தம் 8 தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன. 

தடுப்பூசி விநியோகத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் குழுக்கள் இணைந்து செயல்படுகின்றன. தடுப்பூசி விநியோகத்தில் நிபுணத்துவம் மற்றும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.  பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது கட்டணம் சிறந்ததாக உள்ளது. தடுப்பூசி துறையில் எங்களுக்கு மிகப் பெரிய மற்றும் அனுபவம் வாய்ந்த நெட்வொர்க் உள்ளது.

அடுத்த சில வாரங்களில் கோவிட் தடுப்பூசி தயாராகி விடும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞானிகள் பச்சை சிக்னல் கொடுத்தவுடன், இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.  முதலில் முன்கள பணியாளர்கள், முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும். மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை முதலில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து விலை குறைவாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பு மருந்து போடும் பணி விரைவாக தொடங்கும்.

நமது விஞ்ஞானிகள் கோவிட் தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் வெற்றி பெறுவதில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். மலிவான மற்றும் பாதுகாப்பான தடுப்பூசியை உலகம் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது.

உங்கள் பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக அனுப்புமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story