கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த தெலுங்கானா காங்கிரஸ் பொருளாளர்


கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த தெலுங்கானா காங்கிரஸ் பொருளாளர்
x
தினத்தந்தி 7 Dec 2020 6:55 PM GMT (Updated: 7 Dec 2020 6:55 PM GMT)

தெலுங்கானா காங்கிரஸ் பொருளாளர் அக்கட்சியில் இருந்து விலகி ஜே.பி. நட்டா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

புதுடெல்லி,

தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி 55 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களை கைப்பற்றியிருந்தது.  எனினும், கடந்த கால தேர்தலை விட அதிக தொகுதிகளை இழந்திருந்தது.

இதேபோன்று பா.ஜ.க. இந்த முறை அதிக அளவாக (48 இடங்களில்) வெற்றி பெற்றது.  இது ஆளும் அரசுக்கு பின்னடைவாக கூறப்படுகிறது.  காங்கிரசுக்கு 2 இடங்களே கிடைத்தன.  இந்த நிலையில், தெலுங்கானாவில் காங்கிரஸ் பிரதேச கமிட்டியின் பொருளாளராக உள்ள கூடூர் நாராயண் ரெட்டி அக்கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகியுள்ளார்.  பொருளாளர் பதவியில் இருந்தும் அவர் விலகினார்.

இதன்பின்னர் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்துள்ளார்.  அவருக்கு நட்டா சால்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை மற்றும் அரசியல்வாதியான விஜயசாந்தி அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இன்று சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story