உள்நாட்டில் தயாராகும் ஆயுதங்களை கொண்டு வருங்கால போர்களில் இந்தியா வெற்றி பெறும்: பிபின் ராவத் பேச்சு


உள்நாட்டில் தயாராகும் ஆயுதங்களை கொண்டு வருங்கால போர்களில் இந்தியா வெற்றி பெறும்:  பிபின் ராவத் பேச்சு
x
தினத்தந்தி 18 Dec 2020 11:14 AM GMT (Updated: 18 Dec 2020 11:14 AM GMT)

உள்நாட்டிலேயே தயாராகும் ஆயுதங்களை கொண்டு வருங்கால போர்களில் இந்தியா வெற்றி பெறும் என முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டார்.  அவர் நிகழ்ச்சியில் பேசும்பொழுது, நாடு சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்ள ஆயுத படைகள், சுய சார்புள்ள ஒன்றாக மாறுவதற்கு டி.ஆர்.டி.ஓ. கடந்த சில வருடங்களாக உதவி புரிந்து வருகிறது.

வடக்கு மற்றும் மேற்கு எல்லை பகுதிகளில் நாம் பல்வேறு சவால்களை தற்பொழுது சந்தித்து வருகிறோம் என அவர் கூறினார்.

இதேபோன்று போருக்கு சாத்தியமுள்ள சூழலில் நாட்டின் திறனை அதிகரிக்கும் வகையில், முப்படைகள் அனைத்திற்கும் வேண்டிய ஆயுதங்கள் மற்றும் கருவிகளை உள்நாட்டிலேயே வழங்க நீங்கள் கடும் உழைப்பினை வழங்க வேண்டும்.

தனியார் தொழிற்சாலைகளும் இந்த துறையில் நுழைந்துள்ளன.  அவர்களுக்கு உங்களுடைய ஆதரவு தேவையாக உள்ளது.  வருங்காலத்தில் போர் ஏற்பட கூடிய சூழலில், உள்நாட்டு ஆயுதங்களை கொண்டே நாம் வெற்றி பெறுவோம் என்று நான் உணர்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேட் இன் இந்தியா ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என கூறிய ஜெனரல் ராவத், டி.ஆர்.டி.ஓ. தொடர்ந்து இதுபோன்று செயல்பட்டால், வருங்காலத்தில் ஏற்பட கூடிய சாத்தியம் நிறைந்த போரில், உள்நாட்டிலேயே உருவான ஆயுதங்கள் மற்றும் கருவிகளை கொண்டு மிக பெரிய வெற்றியடைவோம் என என்னால் உறுதியாக கூற முடியும் என்று உள்நாட்டு ஆயுத உற்பத்தி பணியில் ஈடுபட்டு வரும் டி.ஆர்.டி.ஓ.வின் பங்கு பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

Next Story