விவசாயி வீட்டில் தரையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட மத்திய மந்திரி அமித்ஷா


விவசாயி வீட்டில் தரையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட மத்திய மந்திரி அமித்ஷா
x
தினத்தந்தி 19 Dec 2020 1:37 PM GMT (Updated: 19 Dec 2020 1:37 PM GMT)

மேற்கு வங்காளத்தில் விவசாயி வீட்டில் தரையில் அமர்ந்தபடி மத்திய மந்திரி அமித்ஷா மதிய உணவை சாப்பிட்டுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநில சட்டசபைக்கு வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற கூடிய சூழ்நிலை காணப்படுகிறது.  இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு மேற்கு வங்காளம் சென்றார்.

அவர், மேற்கு வங்காளத்தின் பச்சிம் மேதினிப்பூர் நகரில் இன்று நடந்த பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.  இந்த கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி மற்றும் 10 எம்.எல்.ஏ.க்கள் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இன்று இணைந்தனர்.

இதேபோன்று திரிணாமுல் காங்கிரசின் புர்பா புர்த்வான் தொகுதியை சேர்ந்த எம்.பி. சுனில் மண்டல் மற்றும் முன்னாள் எம்.பி. தசரத திர்க்கே ஆகியோரும் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

இதன்பின்னர் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் 3 தசாப்தங்களாக ஆட்சி செய்தது.  கம்யூனிஸ்டு கட்சிக்கு 27 ஆண்டுகளும், சகோதரி மம்தாவுக்கு 10 ஆண்டுகளும் மக்களாகிய நீங்கள் வழங்கினீர்கள்.  பா.ஜ.க.வுக்கு 5 ஆண்டுகள் கொடுங்கள்.  தங்கம் போன்ற மாநிலம் ஆக மேற்கு வங்காளம் உருமாற்றப்படும் என பேசியுள்ளார்.

விவசாயிகளின் நலன்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் தரப்பில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதற்காக டெல்லியை நோக்கி பேரணியாக சென்று 3 வாரங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

எனினும், வேளாண் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் நோக்கில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக, கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் பலிஜுரி கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டிற்கு நண்பகலில் மத்திய மந்திரி அமித்ஷா சென்றார்.

அவருடன் பா.ஜ.க. பொது செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா மற்றும் மேற்கு வங்காள மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் ஆகியோரும் உடன் சென்றனர்.  இதன்பின்னர் அவர்கள் அனைவரும் விவசாயியின் வீட்டில் தரையில் அமர்ந்தபடி மதிய உணவு சாப்பிட்டனர்.

இதுபற்றி அமித்ஷா தனது டுவிட்டரில், மிட்னாப்பூரின் (மேற்கு வங்காளம்) பெலிஜுரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஜுனு சிங் ஜி மற்றும் ஸ்ரீ சனாதன் சிங் ஜி ஆகியோர் வீட்டில் சுவையான மதிய உணவை சாப்பிட்டேன்.

எங்களுக்கு பலத்த வரவேற்பு அளித்து, அன்பு காட்டிய அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என பதிவு வெளியிட்டுள்ளார்.

Next Story