மேற்கு வங்காளத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் நிறைவு - டெல்லி திரும்பினார் அமித்ஷா


மேற்கு வங்காளத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் நிறைவு - டெல்லி திரும்பினார் அமித்ஷா
x
தினத்தந்தி 20 Dec 2020 6:28 PM GMT (Updated: 20 Dec 2020 6:28 PM GMT)

மேற்கு வங்காளத்தில் தனது 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட மத்திய மந்திரி அமித்ஷா, விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

கொல்கத்தா,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு மேற்கு வங்காள மாநிலத்திற்குச் சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின் முதல் நாளான நேற்று மேற்கு வங்காளத்தின் பச்சிம் மேதினிப்பூர் நகரில் நேற்று நடந்த பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

இதேபோன்று திரிணாமுல் காங்கிரசின் புர்பா புர்த்வான் தொகுதியை சேர்ந்த எம்.பி. சுனில் மண்டல் மற்றும் முன்னாள் எம்.பி. தசரத திர்க்கே ஆகியோரும் பா.ஜ.க.வில் இணைந்தனர். இந்த கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜ.க.வுக்கு 5 ஆண்டுகள் கொடுங்கள், தங்கம் போன்ற மாநிலமாக மேற்கு வங்காளம் உருமாற்றப்படும் என்றார்.

இதனை தொடர்ந்து 2வது நாளான இன்று மேற்கு வங்காளத்தின் பீர்பும் மாவட்டம் போல்பூர் நகரில் நடந்த பேரணியில் அமித்ஷா கலந்து கொண்டார். இதில், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இந்த பேரணியில் பொதுமக்களிடையே அமித்ஷா பேசும்பொழுது, என் வாழ்க்கையில் இதுபோன்ற பேரணியை நான் பார்த்ததேயில்லை.  இந்த பேரணியானது, பிரதமர் மோடி மீது வங்காள மக்கள் கொண்டுள்ள அன்பு மற்றும் நம்பிக்கையை வெளிகாட்டுகிறது என்று கூறினார்.

இதனையடுத்து மாநிலத்தின் பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனைகள் மேற்கொண்ட மத்திய மந்திரி அமித்ஷா, தனது 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். இதற்காக துர்காபூர் விமான நிலையத்திற்கு வந்த அவர், விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

Next Story