டாலர் கடத்தல் வழக்கு; கேரள சபாநாயகர் நேரில் ஆஜராகும்படி சுங்க துறை அதிகாரிகள் சம்மன்


டாலர் கடத்தல் வழக்கு; கேரள சபாநாயகர் நேரில் ஆஜராகும்படி சுங்க துறை அதிகாரிகள் சம்மன்
x
தினத்தந்தி 5 March 2021 11:16 PM GMT (Updated: 5 March 2021 11:16 PM GMT)

டாலர் கடத்தல் வழக்கில் கேரள சபாநாயகர் நேரில் ஆஜராகும்படி சுங்க துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கொச்சி,

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 5ந்தேதி வந்த பார்சலை சந்தேகத்தின்பேரில் சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் அன்றைய மதிப்பில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் மறைத்து வைத்து, கடத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேசுக்கு இதில் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது.  இதனை தொடர்ந்து அவரை பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.  இதுவரை 20 பேர் வரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கை அமலாக்க துறை மற்றும் சுங்க துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.  இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் என்பவருக்கும் தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.  இதனை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், கொச்சியில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் வருகிற மார்ச் 12ந்தேதி ஆஜராகும்படி கேரள சட்டசபை சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு சுங்க துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.

இதுபற்றி கேரள உயர் நீதிமன்றத்தில் சுங்க துறை ஆணையாளர் (தடுப்பு) சுமித் குமார் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரமொன்றில், முதல் மந்திரி விஜயன் மற்றும் கேரள சட்டசபை சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோருக்கு டாலர் கடத்தலில் தொடர்பு உள்ளது என தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுவப்னா சுரேஷ் கூறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர 3 கேரள மந்திரிகள் மற்றும் சபாநாயகரின் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி சுவப்னா சுரேஷ் தெளிவுடன் கூறியுள்ளார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story