பா.ஜ.க. முதல்-மந்திரி வேட்பாளராக ஸ்ரீதரனை நான் அறிவிக்கவில்லை - மாநில பா.ஜ.க. தலைவர் மறுப்பு


பா.ஜ.க. முதல்-மந்திரி வேட்பாளராக ஸ்ரீதரனை நான் அறிவிக்கவில்லை - மாநில பா.ஜ.க. தலைவர் மறுப்பு
x
தினத்தந்தி 6 March 2021 3:09 AM GMT (Updated: 6 March 2021 3:09 AM GMT)

கேரளாவில் பாஜக முதல்-மந்திரி வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரனை தாம் அறிவிக்கவில்லை என அம்மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

மெட்ரோமேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன் கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். 88 வயதான அவர் , தாம் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட போவதாக கூறினார். தேர்தலில் நிற்க போவதாகவும் ஸ்ரீதரன் அறிவித்தார். கேரளாவில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் முதல்-மந்திரி பொறுப்பை தாம் ஏற்க தயார் என்றும் ஸ்ரீதரன் தெரிவித்தார். 

இதையடுத்து  கேரளாவில் பாஜக முதல்-மந்திரி வேட்பாளராக மெட்ரோமேன் ஸ்ரீதரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் நேற்று அறிவித்தார். 

இந்நிலையில் அவர் திடீரென மறுத்துள்ளார். முதல்-மந்திரி  வேட்பாளர் யார் என்பதை கட்சி தலைமைதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் முதல்-மந்திரியாக  ஸ்ரீதரனை பார்க்க  மக்கள் விரும்புவதாக தான் குறிப்பிட்டதாக சுரேந்திரன் தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க. முதல்-மந்திரி வேட்பாளராக ஸ்ரீதரனை நான் அறிவிக்கவில்லை என்று மாநில பா.ஜ.க. தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளது அக்கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் முதல்-மந்திரி வேட்பாளராக இருக்க வேண்டும் என்று மாநிலத் தலைமை விரும்புவதாக சில தகவல்கள் கூறியிருந்தாலும், கட்சி இதுபோன்ற எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய மந்திரி வி.முரலீதரன் தெளிவுபடுத்தி உள்ளார்.

Next Story