ஆபாச வீடியோ விவகாரத்தில் தனது மகள் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்திற்கு தடை விதிக்க வேண்டும்; கர்நாடக ஐகோர்ட்டில் இளம்பெண்ணின் தந்தை மனு


ஆபாச வீடியோ விவகாரத்தில் தனது மகள் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்திற்கு தடை விதிக்க வேண்டும்; கர்நாடக ஐகோர்ட்டில் இளம்பெண்ணின் தந்தை மனு
x
தினத்தந்தி 31 March 2021 9:55 PM GMT (Updated: 31 March 2021 9:55 PM GMT)

ஆபாச வீடியோ விவகாரத்தில் எனது மகள் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக ஐகோர்ட்டில் இளம்பெண்ணின் தந்தை மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு: ஆபாச வீடியோ விவகாரத்தில் எனது மகள் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக ஐகோர்ட்டில் இளம்பெண்ணின் தந்தை மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐகோர்ட்டில் தந்தை மனு

முன்னாள் மந்திரியின் ஆபாச வீடியோ விவகாரத்தில் தலைமறைவாக இருந்த இளம்பெண் நேற்று முன்தினம் சிறப்பு கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் ரமேஷ் ஜார்கிகோளிக்கு எதிராக இளம்பெண் தொடர்ந்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஆனால் இளம்பெண்ணின் பெற்றோரோ காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தான் தனது மகளை கடத்தி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் தனது மகள் நீதிபதியிடம் அளித்துள்ள வாக்குமூலத்திற்கு தடை விதிக்க கோரியும், ஆபாச வீடியோ தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறும் வரை அவரது வாக்குமூலத்தை பரிசீலிக்க கூடாது என்று வலியுறுத்தியும் கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று இளம்பெண்ணின் தந்தை ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

வாக்குமூலத்திற்கு தடை

அந்த மனு 21 பக்கங்களை கொண்டதாக இருக்கிறது. என்ன காரணத்திற்காக தனது மகளின் வாக்குமூலத்தை பரிசீலிக்க கூடாது என்பதற்காக, தான் தாக்கல் செய்துள்ள மனுவில் இளம்பெண்ணின் தந்தை விளக்கமாக எடுத்து கூறியுள்ளார். அதன்படி, ஆபாச வீடியோ விவகாரத்தில் எனது மகள் சுயமாக முடிவெடுத்து, அந்த வாக்குமூலத்தை அளிக்கவில்லை. அவருக்கு பின்னால் இருப்பவர்கள் கூறியபடியே வாக்குமூலம் அளித்துள்ளார். சிலரின் வற்புறுத்தல், அழுத்தம் காரணமாகவே நீதிபதி முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இதற்கு பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் சூர்ய முகுந்தராம் இருக்கிறார். எனது மகள் நீதிபதியிடம் வாக்குமூலம் அளிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு சூர்ய முகுந்தராம் வந்துள்ளார். அவருக்கும், இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. இந்த ஆபாச வீடியோ விவகாரத்தால் எனது குடும்பத்தின் மானம், மரியாதை கெட்டுப்போய் விட்டது. 

எனவே 164 சட்டப்பிரிவின்படி எனது மகள் அளித்துள்ள வாக்குமூலத்திற்கு தடை விதிப்பதுடன், இந்த வழக்கு முடியும் வரை அந்த வாக்குமூலத்தை பரிசீலிக்க தடை விதிக்க வேண்டும் என்று இளம்பெண்ணின் தந்தை கூறியுள்ளார். இந்த மனு விரைவில் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story