மம்தா பானர்ஜி - சுவேந்து அதிகாரி மோதும் நந்திகிராம் தொகுதியை கைப்பற்றப்போவது யார்?


மம்தா பானர்ஜி - சுவேந்து அதிகாரி மோதும் நந்திகிராம் தொகுதியை கைப்பற்றப்போவது யார்?
x
தினத்தந்தி 1 April 2021 2:13 AM GMT (Updated: 1 April 2021 2:13 AM GMT)

மேற்குவங்காளத்தில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.




கொல்கத்தா, 

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, 30 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது.
அதில் சுமார் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. எஞ்சிய 7 தொகுதிகளுக்கு முறையே ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில்
பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

அதன்படி, 2-ம் கட்ட தேர்தல் இன்று 30 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி போட்டியிடும்
நந்திகிராம் தொகுதியும் அடக்கம். மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராகவும், மம்தாவுக்கு நெருங்கிய
கூட்டாளியாகவும் இருந்தவர் சுவேந்து அதிகாரி. இவர் திடீரென திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். சுவேந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியில் மிகுந்த
செல்வாக்கு வாய்ந்த நபராக உள்ளார். 

இதனால், நந்திகிராம் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என்பதில் மம்தா பானர்ஜி - சுவேந்து அதிகாரி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், சட்டம்-ஒழுங்கை
பராமரிப்பதற்காக, நந்திகிராம் தொகுதி முழுவதும் தேர்தல் கமிஷன் நேற்று 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவுவரை இது அமலில் இருக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த தொகுதியின் வாக்காளர் அல்லாத யாரும் தேர்தல் முடியும்வரை உள்ளே
நுழைய அனுமதி கிடையாது. ஓரிடத்தில் 5 பேருக்கு மேல் கூட்டம் சேரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நந்திகிராம் தொகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story