கொரோனா தடுப்பூசி மையங்கள் விடுமுறை தினங்களிலும் செயல்பட வேண்டும்-மத்திய அரசு உத்தரவு


கொரோனா தடுப்பூசி மையங்கள் விடுமுறை தினங்களிலும் செயல்பட வேண்டும்-மத்திய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 1 April 2021 10:59 AM GMT (Updated: 1 April 2021 11:52 AM GMT)

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள் ஏப்ரல் மாதத்தில் விடுமுறை தினம் உட்பட அனைத்து நாட்களும் செயல்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.




புதுடெல்லி

மராட்டியம், சத்தீஸ்கார், கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தமிழகம், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில், 72,330 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 84.61 சதவீதம் பேர் மேற்கண்ட எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,14,74,683 -ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40,382 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 459 பேர், கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.5 கோடியைக் கடந்து விட்டது.  45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது இன்று முதல் தொடங்கி உள்ளது.

இந்தநிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாடுமுழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கூடுதல் எண்ணிக்கையில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வாய்ப்பு இருப்பதால் மாநில அரசுகள் அதற்கு ஏற்றவகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி மையங்கள் ஏப்ரல் மாதத்தில் விடுமுறை தினம் உட்பட அனைத்து நாட்களும் செயல்பட வேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்கள் அனைத்து நாட்களும் செயல்படுவதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இன்று முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி போடப்படுவதை மாநில அரசுகள் வேகப்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story