டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்த எந்த திட்டமும் இல்லை - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்


டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்த எந்த திட்டமும் இல்லை - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 2 April 2021 12:49 PM GMT (Updated: 2 April 2021 12:49 PM GMT)

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், மருத்தவ துறை நிபுணர்களுடன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்தினார்.

புது டெல்லி,

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக  கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.  இதனால், சில மாநிலங்களில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியிலும் சமீப காலமாக தொற்று அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று முன் தினம் 1819 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. 

டெல்லியில் நேற்று இந்த ஆண்டில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 2790 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. முந்தைய நாள் பாதிப்பை விட 53 சதவீதம் இது அதிகமாகும்.  கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வரும் சூழ்நிலையில் இருப்பதால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். 

இந்நிலையில் டெல்லியிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், மருத்தவ துறை நிபுணர்களுடன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,

டெல்லியில் கொரோனா பரவல் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கொரோனா பரவலை பொறுத்தவரையில் முதல் அலைக்கும் அடுத்தடுத்த அலைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தொற்று பாதித்த பெரும்பாலானவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். எனவே உடனடியாக ஊரடங்கு அமல்படுத்துவது குறித்த எந்த திட்டமும் இல்லை.

கொரோனா பரவாமல் இருக்க மாநில அரசால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,583 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளன. இந்த உயர்வு நான்காவது அலை. சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம், கவலைப்படத் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story