மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவேன்; தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி உறுதி


மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவேன்; தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி உறுதி
x
தினத்தந்தி 5 April 2021 12:09 AM GMT (Updated: 5 April 2021 12:09 AM GMT)

மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவேன் என்று தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி பேசினார்.

பிரசாரம்

பாகூர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தனவேலு போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி நேற்று 2-வது நாளாக பிரசாரம் செய்தார்.அதன்படி காட்டுக்குப்பம், மணப்பட்டு, மதி கிருஷ்ணாபுரம், பாகூர், பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், குருவிநத்தம், சோரியாங்குப்பம், இருளஞ்சந்தை, கடுவனூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

காலிப்பணியிடங்கள்

எம்.எல்.ஏ.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை கேட்டதற்காக தனவேலுவை தகுதி நீக்கம் செய்தனர். கடந்த 5 ஆண்டு காலமாக காங்கிரஸ் மோசமான ஆட்சியை நடத்தியது. அதில் தி.மு.க.வுக்கும் பங்கு உள்ளது. காங்கிரஸ் அறிவித்த ஒரு தேர்தல் வாக்குறுதியை கூட நிறைவேற்ற முடியவில்லை.

புதுச்சேரியில் 9,500 அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அடுத்து என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி தான் அமையப் போகிறது. அப்போது வேலைவாய்ப்பு வயது வரம்பு 35-ல் இருந்து 40 ஆக உயர்த்தப்படும். ஆட்சிக்கு வந்த ஓராண்டில் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

வளர்ச்சி திட்டங்கள்

2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி எப்படி செயல்பட்டதோ, அதுபோல், மீண்டும் செயல்படுவோம். 12 ஆண்டுகள் முதல்-அமைச்சராக இருந்துள்ளேன். அமைச்சராக பதவி வகித்துள்ளேன். மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும், புதுச்சேரி மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவேன்.

பாகூர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தனவேலுவை வெற்றி பெற செய்து, மீண்டும் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story