தம்பி- வளர்ப்பு மகனை குத்திக்கொன்ற விவசாயி


தம்பி- வளர்ப்பு மகனை குத்திக்கொன்ற விவசாயி
x
தினத்தந்தி 7 April 2021 8:34 PM GMT (Updated: 7 April 2021 8:34 PM GMT)

வீட்டின் குத்தகை பணத்தை யார் பெறுவது என்ற தகராறில் தம்பியையும், தான் வளர்த்த தம்பி மகனையும் விவசாயி குத்திக்கொலை செய்தார். அந்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

சிக்பள்ளாப்பூர்:

அண்ணன்-தம்பி

  சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி டவுனில் ஸ்ரீராம நகரை சேர்ந்தவர் சீனப்பா. இவரது மனைவி சரோஜம்மா. இந்த தம்பதிக்கு 6 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் ஒரு மகன் அஸ்வத் நாராயணன் (வயது 48). விவசாயி. இவர் ஸ்ரீராமநகரில் தனியாக வசித்து வருகிறார். அதுபோல் அவரது தம்பி ஆஞ்சனப்பா (45) என்பவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். இருவரின் பெற்றோரும் சிந்தாமணி டவுனில் வசித்து வருகிறார்கள். சீனப்பா சில வீடுகளை லீசுக்கு (குத்தகைக்கு) விட்டுள்ளார்.

  இந்த குத்தகை பணத்தை தாய்- தந்தைக்கும், ஆஞ்சனப்பாவுக்கும் கொடுக்காமல் அஸ்வத் நாராயணனே வாங்கி வைத்து வந்துள்ளார். மேலும் பெற்றோரின் செலவுக்கும் அவர் பணம் கொடுக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அஸ்வத் நாராயணா, ஆஞ்சனப்பா இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தகராறு

  இதுதொடர்பாக இருவரும் சிந்தாமணி போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பான விசாரணைக்கு இருவரும் நேற்று முன்தினம் போலீஸ் நிலையத்திற்கு சென்றிருந்தனர். ஆஞ்சனப்பா தனது மகன் விஷ்ணு (18) என்பவரையும் அழைத்து வந்திருந்தார்.

  போலீஸ் விசாரணை முடிந்த பிறகு அஸ்வத் நாராயணா, ஆஞ்சனப்பா, விஷ்ணு ஆகிய 3 பேரும் சிந்தாமணியில் உள்ள சரோஜம்மா வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அஸ்வத் நாராயணா, ஆஞ்சனப்பா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். ஆஞ்சனப்பாவும், விஷ்ணுவும் சேர்ந்து அஸ்வத்நாராயணாவை தாக்கியுள்ளனர்.

குத்திக்கொலை

  இதில் ஆத்திரமடைந்த அஸ்வத் நாராயணா ஆஞ்சனப்பா, விஷ்ணு ஆகியோரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் இந்த தாக்குதலில் அஸ்வத் நாராயணாவும் பலத்த காயமடைந்தார். அவர் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிந்தாமணி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டின் குத்தகை பணத்தை யார் பெறுவது என்ற தகராறில் அஸ்வத்நாராயணா- ஆஞ்சனப்பா இடையே ஏற்பட்ட தகராறில் அஸ்வத் நாராயணா, தம்பி ஆஞ்சனப்பா, அவரது மகன் விஷ்ணு ஆகியோரை குத்திக்கொன்றது தெரியவந்தது.

குத்தகை பணத்தை யார் பெறுவது?

  மேலும் கொலையான ஆஞ்சனப்பாவுக்கு 3 மகன்கள் உள்ளதும், அஸ்வத் நாராயணாவுக்கு 3 மகள்களும் உள்ளதும் தெரியவந்தது. தனக்கு ஆண் குழந்தை இல்லாததால் அஸ்வத் நாராயணா தம்பி ஆஞ்சனப்பாவின் மகன் விஷ்ணுவை தத்தெடுத்து வளர்த்து வந்ததும், இந்த நிலையில் வீட்டு குத்தகை பணத்தை யார் பெறவது என்பது தொடர்பான தகராறில் ஆஞ்சனப்பா தத்தெடுத்து வளர்த்து வந்த விஷ்ணுவையும் குத்திக்கொன்றதும் தெரியவந்தது.

  இதையடுத்து கொலையான 2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அஸ்வத்நாராயணாவை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story