காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண் தற்கொலை


காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண் தற்கொலை
x
தினத்தந்தி 7 April 2021 8:48 PM GMT (Updated: 7 April 2021 8:48 PM GMT)

தாவணகெரேயில் காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்து உள்ளார்.

பெங்களூரு:

காதல் திருமணம்

  ஹாவேரி மாவட்டம் பேடகியை சேர்ந்தவர் ரேணுகா (வயது 23). இவர் தாவணகெரே டவுனில் ஒரு கடையில் வேலை செய்தார். அப்போது ரேணுகாவுக்கும், அந்த கடையில் வேலை செய்த பிரகாஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு ரேணுகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ரேணுகா வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரகாசை திருமணம் செய்து கொண்டார். பின்னர் பிரகாசும், ரேணுகாவும் தாவணகெரே டவுனில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

  இந்த நிலையில் ரேணுகா கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 3 மாத கர்ப்பமாக இருந்தார். இதற்கிடையே வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு ரேணுகாவுக்கு, பிரகாசும் அவரது குடும்பத்தினரும் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

  இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ரேணுகா நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த தாவணகெரே மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரேணுகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த நிலையில் வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் ரேணுகாவை, பிரகாசும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து கொலை செய்து உடலை தூக்கில் தொங்க விட்டதாக ரேணுகாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story