புனே நகரில் தடுப்பூசி பற்றாக்குறையால் 109 மையங்கள் மூடப்பட்டன; சுப்ரியா சுலே பதிவு


புனே நகரில் தடுப்பூசி பற்றாக்குறையால் 109 மையங்கள் மூடப்பட்டன; சுப்ரியா சுலே பதிவு
x
தினத்தந்தி 8 April 2021 5:04 AM GMT (Updated: 8 April 2021 5:04 AM GMT)

புனே நகரில் தடுப்பூசி பற்றாக்குறையால் 109 மையங்கள் மூடப்பட்டு விட்டன என தேசியவாத காங்கிரசை சேர்ந்த சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

புனே,

நாட்டிலேயே மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உச்சமடைந்து வருகின்றன.  கடந்த 24 மணிநேரத்தில் 59,907 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டும், 322 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில், மராட்டியத்தின் பன்வெல் மாநகராட்சி கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இதுபற்றி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பன்வெலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி போடும் பணிகளானது, தடுப்பூசி பற்றாக்குறையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.  தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்ட பின்னர் மையங்கள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.

எனினும், மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் கூறும்பொழுது, இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை எங்கும் ஏற்படவில்லை.  தடுப்பூசி பற்றாக்குறை குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை.  மராட்டிய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியுள்ளது என கூறியுள்ளார்.

சில மாநில அரசுகள் தங்கள் தோல்வியை மறைப்பதற்காக, மக்களிடம் கொரோனா பீதியை ஏற்படுத்தி வருகின்றன என்றும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

மராட்டியத்தின் பன்வெல் மாநகராட்சியை தொடர்ந்து புனே நகரில் தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது என கூறப்படுகிறது.  புனேயில் 109 மையங்கள் மூடப்பட்டு விட்டன.  இதனால் பொதுமக்கள் பலர் தடுப்பூசி போட்டு கொள்ள முடியாமலேயே வீடு திரும்பினர் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

இதுபற்றி மக்களவை எம்.பி.யான சுலே வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், புனேயில் 391 மையங்களில் 55,539 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.  ஆனால், தடுப்பூசி இருப்பு இல்லாத நிலையில், ஆயிரக்கணக்கானோர் தடுப்பூசி போடாமலேயே திரும்பி சென்றுள்ளனர்.

புனே நகரில் தடுப்பூசி பற்றாக்குறையால் 109 தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு உள்ளன.  ஏனெனில் தடுப்பூசி கையிருப்பு இல்லை.  பொருளாதார மீட்சிக்கும், கொரோனா தொற்று சங்கிலியை உடைக்கவும் மற்றும் உயிர்களை காக்க ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான தீர்மானத்தில் நாங்கள் தொடர்ந்து உள்ளோம் என தெரிவித்து உள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளை வழங்கி மதிப்புமிகு மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் டுவிட்டரில் சுலே தெரிவித்து உள்ளார்.

Next Story