அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும் - மம்தா பானர்ஜி பேச்சு


அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும் - மம்தா பானர்ஜி பேச்சு
x
தினத்தந்தி 8 April 2021 10:44 AM GMT (Updated: 8 April 2021 10:44 AM GMT)

அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும்; அதில் எந்தவித பிரிவும் இருக்கக்கூடாது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய 5 கட்டங்களுக்கு முறையே ஏப்ரல் 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி அம்மாநிலத்தின் டம்ஜூர் பகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 

பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்தில் இருந்து எனக்கு எதிராக 10 நோட்டீஸ் வந்தாலும் பெரியவிஷயம் இல்லை. அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். அதில் எந்த பிரிவும் இல்லை. நரேந்திரமோடிக்கு எதிராக எத்தனை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அவர் ஒவ்வொரு நாளும் இந்து-முஸ்லிம் (அரசியல்) செய்கிறார். நந்திகிராமில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானியர்கள் என்று கூறியவர்களுக்கு எதிராக எத்தனை புகார்கள் பதியப்பட்டுள்ளன? அவர்கள் வெட்கப்படவில்லையா? எனக்கு எதிராக அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிருஸ்தவர்கள், பழங்குடியினருடன் நான் உள்ளேன்’ என்றார்.

முன்னதாக, முஸ்லிம்கள் வேறு கட்சிகளுக்கு வாக்களித்து ஓட்டை பிரிக்காமல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என மம்தா பேசியதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்தது. அந்த புகாருக்கு விளக்கமளிக்க மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. 

Next Story