நாட்டின் 6 மாநிலங்களில் 18 வயதானோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது - மற்ற மாநிலங்களில் ஒத்திவைப்பு


நாட்டின் 6 மாநிலங்களில் 18 வயதானோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது - மற்ற மாநிலங்களில் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 1 May 2021 7:35 PM GMT (Updated: 1 May 2021 7:35 PM GMT)

18 வயதானோருக்கு தடுப்பூசி போடும் பணி நாட்டின் 6 மாநிலங்களில் மட்டும் தொடங்கியது. பிற மாநிலங்களில் போதிய கையிருப்பு இல்லை என்பதால் திட்டம் ஒத்தி போடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இரண்டாது அலையானது, இளம் வயதினரை குறிவைத்து தாக்கத் தொடங்கியதால் மூன்றாம் கட்டமாக 18 வயதானோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த பணி மே 1-ந் தேதி (நேற்று) தொடங்கும் எனவும், இந்த திட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு 18 வயதுக்கு மேற்பட்டோர் கோவின் தளத்திலும், ஆரோக்கிய சேது செயலியிலும் பதிவு செய்யுமாறு கூறப்பட்டது. இதன்படி நேற்று முன்தினம் காலை வரையில் 2.45 கோடி பேர் பதிவு செய்தனர்.

ஆனால் போதிய தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததாலும், தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் ஆர்டர் செய்தும், சப்ளை எப்போது வரும் என்று தெரியாததாலும், 18 வயதானோருக்கு தடுப்பூசிபோடும் பணியைத் தொடங்குவதில் மாநிலங்கள் திணறின. பல மாநிலங்கள் 18 வயதானோருக்கு தடுப்பூசிபோடும் பணியை நேற்று தொடங்கவில்லை. இருப்பினும் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளைக் கொண்டே 18 வயதானோருக்கு தடுப்பூசி போடும் பணியை மராட்டியம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், சத்தீஷ்கார், குஜராத், ஒடிசா ஆகிய 6 மாநிலங்கள் நேற்று வெற்றிகரமாக தொடங்கின.

பதிவு செய்தோர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

மராட்டியத்தில் மும்பை, புனே, தானே நகரங்களில் தலா 20 ஆயிரம் டோஸ், பிற மாவட்டங்களில் 3,000 முதல் 10 ஆயிரம் டோஸ் வரையில் ஒதுக்கப்பட்டு பணி நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன. மும்பையில் 1000 பேருக்கு தடுப்பூசிபோடப்பட்டதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேசத்தில் 75 மாவட்டங்களில் லக்னோ, கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 18 வயதானோருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது. ராஜஸ்தானில் 33 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் 18 வயதானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. குஜராத்தில் 33 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் இந்த பணி தொடங்கியது. சத்தீஷ்காரில் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு குறிப்பாக பாதிப்பு ஆபத்து உள்ள பழங்குடி மக்களில் 18 வயதானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கர்நாடகத்தில் திட்டத்தின் தொடக்க அடையாளமாக 18 வயதானோருக்கு தடுப்பூசிபோடும் பணியை பெங்களூருவில் முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

அப்பல்லோ, போர்ட்டீஸ், மேக்ஸ் குழும தனியார் ஆஸ்பத்திரிகளில் பல நகரங்களில் 18 வயதானோருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும் டெல்லியில் இந்த பணி நடைபெறவில்லை.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பலர் ஆர்வமுடன் வந்து அங்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டு சென்றனர். ஒரு டோஸ் தடுப்பூசிக்கு ரூ.850 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால், அறிவித்தபடி, தமிழக அரசால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்க முடியவில்லை. ஆனாலும், கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, நேற்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story