வெளிநாடுகளில் இருந்து கடந்த 5 நாட்களில் 25 விமானங்களில் கொரோனா நிவாரண பொருட்கள் வந்தன - டெல்லி விமான நிலையம் தகவல்


வெளிநாடுகளில் இருந்து கடந்த 5 நாட்களில் 25 விமானங்களில் கொரோனா நிவாரண பொருட்கள் வந்தன - டெல்லி விமான நிலையம் தகவல்
x
தினத்தந்தி 3 May 2021 10:25 PM GMT (Updated: 3 May 2021 10:25 PM GMT)

வெளிநாடுகளில் இருந்து கடந்த 5 நாட்களில் 25 விமானங்களில் கொரோனா நிவாரண பொருட்கள் வந்தன என்று டெல்லி விமான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித்தவிக்கும் இந்தியாவை மீட்பதற்கு பல்வேறு உலக நாடுகள் உதவிகளை அனுப்பி வருகின்றன. இந்த மருத்துவ, நிவாரண பொருட்கள் அனைத்தும் பெரும்பாலும் டெல்லி விமான நிலையத்துக்கு வந்து சேர்கின்றன. கடந்த 28 முதல் நேற்று முன்தினம் (மே 2) வரையிலான 5 நாட்களில் மட்டும் 25 விமானங்களில் சுமார் 300 டன் பொருட்கள் வந்திருப்பதாகவும், இவை பெரும்பாலும் விமானப்படை விமானங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் டெல்லி விமான நிலையம் கூறியுள்ளது.

இந்த பொருட்களை கையாளுவதற்காக விமான நிலையத்தில் 3,500 ச.மீ. பரப்பளவை ‘ஜீவோதய் கிடங்கு’ என்ற பெயரில் ஒதுக்கியிருப்பதாகவும் அது கூறியுள்ளது. இவ்வாறு கொண்டு வரப்பட்ட பொருட்களில் 5,500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், சுமார் 3,200 சிலிண்டர்கள், 9.28 லட்சம் முககவசங்கள், 1.36 லட்சம் ரெம்டெசிவிர் ஊசிமருந்துகள் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த பொருட்கள் பெரும்பாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, அமீரகம், உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து, ஜெர்மனி, கத்தார், ஹாங்காங், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது.

Next Story