வெடிகுண்டு கார் வழக்கில் பரம்பீர் சிங்கின் தொடர்பு குறித்து என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்; முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் வலியுறுத்தல்


வெடிகுண்டு கார் வழக்கில் பரம்பீர் சிங்கின் தொடர்பு குறித்து என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்; முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 May 2021 3:31 AM GMT (Updated: 6 May 2021 3:31 AM GMT)

வெடிகுண்டு கார் வழக்கில் முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கிற்கு உள்ள தொடர்பு குறித்து என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என முன்னாள் உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் வலியுறுத்தி உள்ளார்.

ஐகோா்ட்டில் மனு

மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், உள்துறை மந்திரியாக இருந்த அனில்தேஷ்முக் போலீசாைர மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தருமாறு கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டி இருந்தார். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டதால், அனில் தேஷ்முக் மந்திரி பதவியை இழந்தார். மேலும் அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் சி.பி.ஐ. தனக்கு எதிராக பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரி அனில்தேஷ்முக் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

விசாரிக்க வேண்டும்

பரம்பீர் சிங் கூறிய பொய்யான குற்றச்சாட்டை அடுத்து சி.பி.ஐ. என் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளது. எனவே நீதி கேட்டு ஐகோர்ட்டை அணுகி உள்ளேன். பரம்பீர் சிங் மீதான புதிய ஊழல் புகார்கள் தற்போது செய்தித்தாள், டி.வி. சேனல்களில் தினந்தோறும் வருகின்றன. இதேபோல வெடிகுண்டு கார் வழக்கு, ஹிரேன் மன்சுக் மர்ம மரணத்திலும் சச்சின் வாசே, பரம்பீர் சிங்கிற்கு உள்ள தொடர்பு குறித்து பல விஷயங்கள் வெளிவரும். இந்த வழக்குகளில் பரம்பீர் சிங்கிற்கு உள்ள தொடர்பு குறித்து என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும். பரம்பீர் சிங் செய்த தீவிரமான தவறுகள் மன்னிக்க முடியாதது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story