மத்திய அரசு 50 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சப்ளையை குறைத்துள்ளது; மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தகவல்


மத்திய அரசு 50 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சப்ளையை குறைத்துள்ளது; மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
x
தினத்தந்தி 7 May 2021 3:49 AM GMT (Updated: 7 May 2021 3:49 AM GMT)

மத்திய அரசு 50 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சப்ளையை குறைத்துள்ளதாக மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.

கடும் தட்டுப்பாடு

மராட்டியத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஆங்காங்கே கொரோனா நோயாளிகளின் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் மத்திய அரசு மராட்டியத்திற்கு வழங்குப்பட்டு வந்த ஆக்சிஜன் அளவை குறைத்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கடுமையான தாக்கம்

கர்நாடகத்தில் இருந்து திரவ மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீட்டை மத்திய அரசு 50 மெட்ரிக் டன் குறைத்துள்ளது. நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பிரச்சினையை மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட பிற அதிகாரிகளிடம் எழுப்புவது அவசியம்.

கொரோனா வைரசால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தபடும் உயிர் காக்கும் ஆக்சிஜன் வாயுவின் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசு மருத்துவ ஆக்சிஜன் ஆலைகளை அமைத்து வருகிறது.

இவ்வாறு இவர் கூறினார்.


Next Story