கேரளாவில் இன்று முதல் வரும் 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்


Photo Credit:PTI
x
Photo Credit:PTI
தினத்தந்தி 8 May 2021 3:00 AM GMT (Updated: 8 May 2021 3:15 AM GMT)

கேரளாவில் இன்று (மே 8) முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. வரும் 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.


கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் அம்மாநிலத்தில்  முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கேரளாவில் இன்று (மே 8) முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. வரும் 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். 

ஊரடங்கு காலத்திலும்  மளிகை பொருட்கள், பழங்கள் காய்கறிகள், இறைச்சி கடைகள் என அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 7 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்க அனுமதி உண்டு. எனினும், வீட்டுக்கே வந்து பொருட்களை டெலிவரி செய்ய கோரிக்கை விடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.  அவசர தேவைகளுக்கு மாநிலங்களுக்கு இடையே பயணிக்க அனுமதி உண்டு. எனினும், இதற்காக பதிவு செய்ய வேண்டும்.  

மத வழிபாட்டு தலங்கள் செல்ல மக்களுக்கு அனுமதி கிடையாது. திருமண நிகழ்ச்சிகள், இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது.  பொது பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. எனினும் விமானம், ரயில் போக்குவரத்து இயங்கும். மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க அனுமதி கிடையாது. 


Next Story