சரியாக பாடம் படிக்காத குழந்தையை கண்டித்த மனைவியை கத்தியால் குத்திய கணவர்...!


சரியாக பாடம் படிக்காத குழந்தையை கண்டித்த மனைவியை கத்தியால் குத்திய கணவர்...!
x
தினத்தந்தி 1 Dec 2021 2:41 AM GMT (Updated: 1 Dec 2021 2:55 AM GMT)

குழந்தை சரியாக பாடம் படிக்காததால் கண்டித்த மனைவியை அவரது கணவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை சாஸ்திரி நகரை சேர்ந்தவர் அவினாஷ் வர்பே (32). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. அவினாஷ் வர்பேயின் மனைவி பெயர் ஜெயஸ்ரீ. 

இதற்கிடையில், அவினாஷ் வர்பேக்கும் அவரது மனைவி ஜெயஸ்ரீக்கும் இடையே சிறுசிறு பிரச்சினைகளுக்காக அவ்வப்போது சண்டை வருவது வழக்கமாகும்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு ஜெயஸ்ரீ தனது குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கற்றுக்கொண்டுத்துள்ளார். அப்போது, குழந்தை சரியாக பாடம் கற்காமல் இருந்துள்ளது. இதனால், குழந்தையை ஜெயஸ்ரீ அடித்துள்ளார். 

அப்போது, வீட்டில் இருந்த கணவர் அவினாஷ் தனது மனைவி குழந்தைகளை அடிப்பதால் ஆத்திரமடைந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவி ஜெயஸ்ரீயை அவினாஷ் வீட்டில் இருந்த கத்தியால் பல முறை சரமாரியாக குத்தினார். குழந்தைகள் கண்முன்னே நடந்த இந்த சம்பவத்தில் ஜெயஸ்ரீயின் கழுந்து மற்றும் வயிறு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டது. கத்தியால் குத்தப்பட்ட ஜெயஸ்ரீ ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

ஜெயஸ்ரீயின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தின் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வருவதற்கு முன்னர் மனைவியை கத்தியால் குத்திய அவினாஷ் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெயஸ்ரீயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஜெயஸ்ரீயின் கணவர் அவினாஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story