இஸ்லாமிய பெண்கள் விரும்பியவரை மணக்கலாம் - பஞ்சாப் ஐகோர்ட்டு


இஸ்லாமிய பெண்கள் விரும்பியவரை மணக்கலாம் - பஞ்சாப் ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 27 Dec 2021 4:08 AM GMT (Updated: 27 Dec 2021 4:08 AM GMT)

பருவமெய்திய இஸ்லாமிய பெண்கள் விரும்பியவரை மணக்கலாம் என்று பஞ்சாப் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

சண்டிகர், 

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சூழலில் பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது முஸ்லீம் பெண் ஒருவர், 33 வயதுடைய இந்து நபரை திருமணம் செய்தார். இந்தத் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அந்த பெண் சார்பில் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி ஹர்நரேஷ் சிங் கில், ‘‘பருவமெய்திய இஸ்லாமிய பெண்ணுக்கு, அவர் விரும்பும் யாரையும் திருமணம் செய்யும் உரிமை இருக்கிறது. அந்த பெண்ணின் முடிவில் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் தலையிட உரிமை இல்லை. முஸ்லீம் பெண்ணின் திருமணம் என்பது முஸ்லீம் தனி நபர் சட்டத்துக்கு உட்பட்டது. மனுதாரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்துக்கு மாறாக செயல்பட்டார் என்பதற்காக, அரசியலமைப்புச் சட்டத்தில் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை பறிக்க முடியாது’’ என்று கூறி, அந்தத் தம்பதிக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

Next Story